articles

img

வேலை நிறுத்த உரிமை சமரசம் இல்லை! - ஆர். கருமலையான்

உலகின் அனைத்துக் கண்டங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையின் மீது இடைவிடாமல் திட்டமிட்ட தாக்குதல்கள் கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்படு கின்றன. தற்போது, சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ஐஎல்ஓ) உள்ள முதலாளிகள் குழு மிகத்  தீர்மானமாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு சவால் விடுக்கிறது.  துரதிர்ஷ்டவசமாக, ஐஎல்ஓவில் இடம்பெற்றுள்ள வர்க்க சமரசப் போக்கு டன் கூடிய தொழிலாளர்கள் குழு  முதலாளிகளின் முன்மொழிவிற்கு சாந்தமாக  பணிந்து போய் உள்ளது.

ஐஎல்ஓ உருவானதன் பின்னணி  

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வர்க்கக் குணாம்சத்தின் காரணமாக ஐஎல்ஓ மாநாட்டுத் தீர்மானங்களிலோ அல்லது பரிந்துரைகளிலோ தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை பற்றி எதுவும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.  முதலாம் உலகப் போருக்குப் பிறகு வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, இன்றைய ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னோடியாக, உலக அமைதியைப் பேணுவதற்காக உலகளாவிய அரசுகளுக்கிடையேயான முதல் அமைப்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு லீக் ஆஃப் நேஷன்ஸ். அதனுடைய ஒரு உறுப்பாக சர்வதேச அளவில் தொழி லாளர்களுக்கான முத்தரப்பு அமைப்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐஎல்ஓ எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு.  

முதல் உலகப் போருக்குப் பிறகு, சோசலிசத்தைப் படைக்க வேண்டும் என்ற ஒரு வலுவான விருப்பத்தை, நோக்கத்தை உலகத் தொழிலாளி வர்க்க  இயக்கங்கள் கொண்டிருந்தன.  அதை நோக்கி சாய்ந்தன; ‘கம்யூனிசம் எனும் கோடிக்கால் பூதம்’  அப்போது ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகம் முழு வதையும் ஆட்டிப்படைத்தது. இந்தச் சூழலில், 1917 ஆம் ஆண்டின் மாபெரும் அக்டோபர் புரட்சியின்  பின்னணியில், உழைப்பு சக்திக்கும் மூலதனத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்பாட்டை சமாதானப்படுத்து வதற்காக - முடிந்தால் கட்டுப்படுத்துவதற்காக – புரட்சி யை நோக்கித் திரும்பி விடாமல் மட்டுப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐஎல்ஓ.

‘உழைப்புச் சக்தி’ -  ஒரு சரக்கா? இல்லையா? 

உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையில் உள்ள அதிகார உறவுகள் மற்றும் உற்பத்தியின் லாபத்தை பகிர்ந்து கொள்வதில் உள்ள அசமத்துவ நிலை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தத் துவங்கியது.  முதலாளித்துவ சமுதாயத்தில் உழைப்பின் பாத்திரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும், அதன் மூலமாக உழைப்பாளர்களின் பேரம் பேசும்  சக்தியை உலகத் தொழிலாளர் சந்தையில் குறைக்க வும், உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான மோதல்களை – அடிப்படை முரண்களை மங்கிப் போகச் செய்யவும் ஐஎல்ஓ அந்த நேரத்தில் எடுத்த முயற்சி தான் ”உழைப்புச் சக்தி ஒரு சரக்கல்ல” என்ற வாதம்.

உண்மையில் உழைப்புச் சக்தி என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் சரக்காக்கப்படுகிறது என்று மார்க்சியத் தத்துவம் வரையறை செய்கிறது. உண்மையில், உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையில் மோதல்கள் எழுந்த போதெல்லாம், தொழிலாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ அமைப்பின் மீது ஏற்படும் கொதிப்பையும் சீற்றத்தை யும் மட்டுப்படுத்தும் பங்கினையே இதுவரை ஐஎல்ஓ ஆற்றியுள்ளது.  சமூக மாற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தொழிலாளி வர்க்கத்தின் ‘போராட்டம்’ எனும் ஆயுதத்தைப் பறித்து அவர்களை அதிகாரமற்றவர்களாகவும் ஆக்குகிறது.

வேலைநிறுத்த உரிமையின் மீது தாக்குதல்  

சமீபத்தில் ஐஎல்ஓ இது போன்றதொரு முயற்சியை -  வேலை நிறுத்த உரிமையின் மீதான  தாக்குதலாக மேற்கொண்டுள்ளது.  உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு இது மிகவும் ஆபத்தான விஷயம்.  ஆனால், இதற்குரிய கவனத்துடன் நமது நாட்டில் இந்த விஷயம் அணுகப்படவில்லை.  2023 நவம்பர் 10ம் தேதி, ஐஎல்ஓ-வின் நிர்வாகக்குழு, 1948 சங்க சுதந்திரம் மற்றும் சங்கம் சேர்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கான சிறப்புத் தீர்மானம் 1948 (எண்.87)ல் வேலை நிறுத்த உரிமை  குறித்து அளித்துள்ள பொருள் விளக்கம் குறித்து, சர்வதேச நீதிமன்றத்திடம்   ஆலோசனைக் கேட்டுள்ளது.  1948(எண் 87)ன் சங்க சுதந்திரம் மற்றும் சங்கம் சேர்வதற்கான உரிமையின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் வேலை நிறுத்த  உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை   மேலும், ஐஎல்ஓ-வின் முத்தரப்பு அங்கத்தினர்களாக உள்ள தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசுகளிடையே ஒரு கருத்து வேறுபாடு நிலையாக எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

சங்கம் சேரும் உரிமையின் தொடர்ச்சியே வேலை நிறுத்தம்

ஐஎல்ஓ சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்களை உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளனவா என்பதை கண்காணிப்பதற்காக ஐஎல்ஓ நிர்ணயித்துள்ள சுயேச்சையான, தனிநபர் நிபுணர்களை உள்ள டக்கிய,  குழு  - வேலை நிறுத்த உரிமை என்பது சங்கம் சேரும் உரிமையின் தொடர்ச்சியே என்று கருத்து தெரிவித்துள்ளது.  சங்க சுதந்திரம் மற்றும் சங்கம் சேர்வதற்கான உரிமை குறித்த 1948 (எண். 87) உடன்படிக்கையின் கீழ் பல வருடங்களாக இந்த கருத்து அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.  எனவே, வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை,  சர்வதேச சட்டத்தின் கீழ் ஐஎல்ஓ-வின் மாநாட்டுத்  தீர்மானங்கள் 87 (சங்க சுதந்திரம்) மற்றும் 98  (ஒழுங்கமைத்தல் மற்றும் கூட்டுப் பேரம் மேற்கொள்ளுதல்) ஆகியவற்றிலிருந்து சட்டரீதி யாகப் பெறப்பட்டதாகும்.

தீர்மானம் 87 சொல்வது என்ன?  

மாநாட்டுத் தீர்மானம் எண் 87 என்ன சொல்கிறது? அதன் பிரிவு 3 ன்படி, ‘தொழிலாளர்கள்’  மற்றும் முதலாளிகளின் அமைப்புகளுக்கு அவர்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கவும் அவர்களின் திட்டங்களை உரு வாக்குவதற்கும் உரிமை உண்டு. இந்த அடிப்படை அம்சத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், பிரிவு 10, ‘அமைப்பு’ என்பதை, ‘தொழிலாளர்கள் அல்லது  முதலாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான’ எந்தவொரு அமைப்பும்  ‘அமைப்பு’ எனப்படும் என வரையறுக்கிறது. இந்தத்  தீர்மானம் 153 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்த  முக்கிய தீர்மானத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது மற்றொரு சோகக் கதை.

எவ்வாறாயினும், தீர்மானம் எண். 87க்கு நிபுணர்கள் குழு அளித்த  விளக்கம் குறித்து முதலாளிகள் குழு தற்போது அதிக அளவில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தப் பிரச்சனையில் முட்டுக்கட்டை இருந்து வருகிறது. ஐஎல்ஓ-வின் ஆட்சி மன்றக் குழுவில்,  தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும்,  முதலாளி களின் பிரதிநிதிகளுக்கும் இடையே வேலைநிறுத்தம் செய்யும்  உரிமை குறித்து ஒரு மோதல் போக்கு இருந்து வருவதுடன், அதற்கான முறையான அங்கீகாரம் வழங்கப்படுவதை முதலாளிகளின் பிரதிநிதிகள் இடைவிடாமல் எதிர்த்து வருகின்றனர்.

பிரிவு 37 சொல்வது என்ன?

ஐஎல்ஓ அமைப்புச் சட்டத்தின் 37 வது பிரிவின் கீழ், மாநாட்டுத் தீர்மானங்களின் விளக்கம் தொடர்பான எந்தவொரு கேள்வியும் அல்லது சர்ச்சையும், சர்வதேச நீதிமன்றத்தின் முடிவிற்குப் பரிந்துரைக்கப்படலாம்.  நீதிமன்றத்திற்கு இரண்டு வகையான பங்கு  உள்ளது: முதலாவது, சர்வதேசச்  சட்டத்தின்படி, உறுப்பினர்களாக உள்ள அரசுகளால்  சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மோதல்களைத் தீர்ப்பது;  இரண்டாவதாக, ஐஎல்ஓ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்  அங்கீகரிக்கப்பட்ட பிற முகமைகளால் எழுப்பப்படும் சட்டக் கேள்விகளுக்கு ஆலோசனைக் கருத்துக்களை வழங்குவது. பிரிவு 37ன் அடிப்படைக் கருத்தின் படி, சர்வதேச நீதிமன்றம் வழங்கும் ஆலோசனைக் கருத்து அதிகாரப்பூர்வமானதாகவும் இறுதி அறிவிப்பாகவும் கருதப்பட வேண்டும். அது அப்படியே செயல்படுத்தப் படவும் வேண்டும். ஐஎல்ஓ அந்த ஆலோசனைக்குக் கட்டுப்பட்டது. மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை.

சிலி அனுபவம்

1970 களின் முற்பகுதியில், சிலியில் சால்வடார் அலெண்டே தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசாங்கம், நாட்டின் கேந்திரமான சொத்துக்களை தேசியமயமாக்குவது உள்ளிட்ட சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது. தனது நாட்டை நவ-தாராளவாத சீர்திருத்தங்களின் ஆய்வகமாக மாற்றும் ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு சவால் விடுத்தது. அப்போது  ஏகாதிபத்திய கைக்கூலியான அகஸ்டோ பினோசெட், சட்டவிரோத வழிமுறைகள் மூலம் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டுடன் அலெண்டேவின் சட்டப்பூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்ததை நினைவுகூர்வது முக்கியமானதாகும்.  பின்னர் ஏகாதிபத்திய அடிமையான சர்வாதிகாரி பினோசெட், பொருளாதார மறுசீரமைப்பு என்ற பெயரில், கூட்டுப் பேர உரிமையின் மீது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.

வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் அளிக்கப்பட்ட பாதுகாப்பினை அரிக்க முற்பட்ட அந்த புயல் வீசிய நாட்களில், ஐஎல்ஓ -வின்  ஆட்சிமன்றக் குழு தொழிற்சங்கங்கள் மீதான பினோசெட்டின் தாக்குதல்கள் குறித்து உண்மையைக் கண்டறியவும் சமரசத் தீர்வினைத் தரவும் ஒரு குழுவினை நியமித்தது. அப்படிப்பட்ட காலத்திலும் கூட, அந்தக் குழு தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமையை நிலைநாட்டியது. இதன் விளைவாக, சிலியின் பினோசெட் ஆட்சி, வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமைக்கான அங்கீகாரத்தை நிறுத்த வேண்டாம் என்று ஆணையத்தால் வலியுறுத்தப்பட்டது.

 எனவே, தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறைகூவல்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தும்படியான எந்தவொரு  தடையும் சிறப்புத் தீர்மானம் எண். 87 இன் அடிப்படைக்கு எதிரானதாகும். நடைமுறை வரலாற்றில் அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்திற்கு முரணானதாகவும் இருக்கும்.

சமரசம் செய்ய முடியாது

எனவே, தொழிலாளர்களின் அத்தகைய பிரிக்க முடியாத உரிமை - அதுவும் பெரும்பாலும் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடிய உரிமையான வேலை நிறுத்த உரிமையை ஒருபோதும்  சமரசம் செய்ய முடியாது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு (ஐடியுசி) எனப்படும் மஞ்சள் தொழிற்சங்க மையம் (ஒரு நிறுவனம் அல்லது “மஞ்சள்” தொழிற்சங்கம் என்பது ஒரு முதலாளி யால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற அல்லது தேவை யற்ற நபர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு தொழிலாளர் அமைப்பாகும், எனவே இது ஒரு  சுயேச்சையான தொழிற்சங்கம் அல்ல.) ஐஎல்ஓ  மற்றும் அதன் முக்கிய அங்கங்களான ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்து கின்றது. அதன் இந்திய துணை நிறுவனங்கள் ஐஎன்டியுசி மற்றும் எச்எம்எஸ்  ஆகியவை. ஆட்சிமன்றக் குழுவில் ஐஎன்டியுசியை மாற்ற பிஎம்எஸ் முயற்சிக்கிறது. உலகளாவிய முதலாளி களின் அதிகார செல்வாக்கின் இடைவிடாத அழுத்தத்தின் காரணமாக, இந்த முக்கியமான பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்ப அவர்கள் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், வர்க்கம் சார்ந்த உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பு (WFTU) மற்றும் அதன் இணைப்பு அமைப்புகளான சிஐடியு, ஏஐடியுசி மற்றும் இதர இடதுசாரி தொழிற்சங்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே நடைமுறையில் இதற்கான தீர்வு எட்டப்பட்டதால், சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படக்கூடாது என்ற கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்தன. 

தொழிலாளி வர்க்கத்திற்கு பேராபத்து

முதலாளித்துவத்தின் நீடித்த, அமைப்புரீதியான நெருக்கடி மற்றும் நிலைமையை சமாளிக்க, முதலாளிகள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்  சட்டங்களின் அனைத்து பாதுகாப்புக் கூறுகளி லிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள, தொழி லாளர் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மிகவும் வெறித்தனமாக முயல்கின்றனர். இந்தச் சூழ்நிலை யில், வேலை நிறுத்தம் தொடர்பான சிறப்பு மாநாட்டின் தீர்மானத்தை சர்வதேச நீதிமன்றத்தின் விளக்கத்திற்கு அனுப்பிவிடுவது நிச்சயமாக ஆபத்து நிறைந்ததும் கவலைக்குரிய விஷயமும் ஆகும்.

இதற்கிடையில், ஐஎல்ஓ உடன்படிக்கை 87 இன் கீழ் வேலைநிறுத்த உரிமை தொடர்பான ஆலோசனை நடவடிக்கைகளில் பங்கேற்க சர்வதேச நீதி மன்றத்தால் அமெரிக்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா இதுவரை 87, 98 ஆம் உடன்படிக்கைகளை அங்கீகரிக்கவில்லை.

சர்வதேச நீதிமன்றம் மற்றும் அதன் செயல்பாட்டின் மீது நமக்கு எந்தவிதமான மாயையை யும் இல்லை. ஐஎல்ஓ-வின் ஆட்சிமன்றக் குழுவில், வலதுசாரி சார்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மட்டுமல்ல; முதலாளிகளும், அரசாங்கப் பிரதிநிதிகளும் உள்ளனர். கார்ப்பரேட்டு களும் அரசாங்கங்களும் அதிக பலம் மற்றும் பெரும்பான்மையுடன் அதன் முன்னணி அமைப்பு களில் இருக்கின்றனர் என்ற போதும், தொழிலாளர் களுக்காகக் குரல் எழுப்புகிற, ஏதாவது செய்கிற ஒரே ஐ.நா. அமைப்பு இதுதான்!

எனவே, வேலைநிறுத்த உரிமைப் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பும் ஐஎல்ஓ-வின் நடவடிக்கை, உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு பேரழிவு தரும் நிகழ்வாக மாறக்கூடும். 

வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கான உற்பத்தி மற்றும் லாபத்தை நிறுத்துவதற்கான உரிமை என்பது,  முதலாளித்துவ அமைப்பின் குறைபாடு அல்லது பலவீனத்தில் இருந்துதான் பிறந்துள்ளது. இந்த முன்னணிப் போரில், தொழிலாளி வர்க்கம் அதன் மிக உயர்ந்த ஆயுத வடிவமான வேலை நிறுத்த உரிமையை சரணடையச் செய்ய முடியாது. 

தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சட்டத்தின் வரம்பிற்குள் வாழ முடியாது, ஏனெனில் இந்த அழிவுகரமான அமைப்பையே நாம் கடந்து செல்ல விதிக்கப்பட்டுள்ளோம்.  இந்த சவால்களை அனைத்து  கவனத்துடனும் தயார்நிலையுடனும் எதிர்கொள்ள நாம் உடனடியாகத் தயாராவோம்.

வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கான உற்பத்தி மற்றும் லாபத்தை நிறுத்துவதற்கான உரிமை என்பது,  முதலாளித்துவ அமைப்பின் குறைபாடு அல்லது பலவீனத்தில் இருந்துதான் பிறந்துள்ளது. இந்த முன்னணிப் போரில், தொழிலாளி வர்க்கம் அதன் மிக உயர்ந்த ஆயுத வடிவமான வேலை நிறுத்த உரிமையை சரணடையச் செய்ய முடியாது. 

தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்

ஆர். கருமலையான் 

அகில இந்திய செயலாளர், சிஐடியு